வரலாற்று பொக்கிஷம் - அன்னை சிவகாமி அம்மாள் பேட்டி (02-07-1961)


Admin
காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோது, அவரது அன்னை சிவகாமி அம்மையாரை ஆனந்த விகடன் பேட்டி கண்டு (2.7.61) வெளியிட்டது. (ஆனந்த விகடனுக்காகப் பேட்டி கண்டவர் எழுத்தாளர் சாவி) அதிலிருந்து சில பகுதிகள்;

விருதுநகர் தெப்பக்குளம். குளத்தைச் சுற்றிலும் கடை வீதிகள். அந்த வீதிகளில் ஒன்றுக்குள்ளே பிரிந்து செல்லும் சந்துக்குள் புகுந்து சென்றால், அங்கிருந்து வெறொரு சந்து திரும்புகிறது. அப்புறம் இன்னொரு சந்து; அதற்கப்புறம் மற்றொரு சந்து. ‘சுலோசன நாடார் வீதி’ என்னும் அந்தச் சின்னஞ்சிறு சந்துக்குள்ளேதான், தமிழ்நாட்டின் தவப்புதல்வர் காமராஜர் அவர்களை ஈன்றெடுத்த அன்னை சிவகாமி அம்மாள் வாழ்ந்து வருகிறார்.

மிகச் சாதாரணமான ஓர் எளிய இல்லம். நாங்கள் போன சமயம் வாயில் கதவு திறந்தே வைக்கப்பட்டிருந்தது. அங்குள்ள கயிற்றுக் கட்டிலில் அந்த அம்மையார் படுத்திருந்தார். சின்ன இடம்தான்; ஆனால் துப்புரவாக இருந்தது. நாலு பக்கத்துச் சுவர்களிலும் பழம் பெரும் தேச பக்தர்களின் படங்கள். அவற்றுக்கிடையே வேல்முருகன் படம். அதற்குப் பக்கத்தில் சத்தியமூர்த்தியின் உருவம்!

கட்டிலில் படுத்திருந்த மூதாட்டியார் எங்களைக் கண்டதும் எழுந்து உட்கார்ந்தார். மூச்சுத் திணறியது.

“வாங்கய்யா…” என்று அன்புடன் இன்முகம் காட்டி அழைத்தபடியே எழுந்துபோய் மின்சார விளக்கின் ‘ஸ்விட்சைப்’ போட்டார். விளக்கின் ஒளி அந்த எளிய வாழ்க்கையின் தூய்மையை இன்னும் பளிச்சென்று எடுத்துக் காட்டியது.

பண்புமிக்க அம்மூதாட்டியார் ‘நீங்கள் யார்?’ என்று எங்களைக் கேட்கவில்லை. நாங்களாகவேதான் சொன்னோம்.

“ஓர் ஒப்பற்ற தேசத் தொண்டனை, தியாகியை, தலைவனை, தவப் புதல்வனைப் பெற்றெடுத்த தங்கள் திருமுகத்தைக் கண்டு போகவே வந்துள்ளோம். அந்த உத்தமனைப் பெற்றெடுத்த பாக்கியசாலி அல்லவா நீங்கள்?”

“ஆமாம், ஐயா, அது ஒரு சாதாரணப் பிள்ளை இல்லை; இணையற்ற ரத்னம்…!” தொட்டிலில் இட்டு தாலாட்டி வளர்த்த தாயின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட மணிவாக்கு இது.

“தங்கள் திருமகனைப் பற்றித் தாங்கள் ஏதாவது சொல்லவேண்டும்.”

“நான் என்ன சொல்லப்போறேன், ஐயா? எனக்கு வயதாகிவிட்டது. அத்துடன் ரத்தக்கொதிப்பு வேறு. பேசினால் எனக்கு மூச்சு திணறுகிறது. ரெண்டு வருஷம் உப்பைத் தள்ளிப் பத்தியச் சாப்பாடு சாப்பிட்டேன். இப்போது கொஞ்சம் பரவாயில்லை. சாப்பாட்டில் உப்பு சேர்த்துக்கொள்கிறேன்.”

“சென்னைக்குப் போய் மகனோடு இருப்பதில்லையா?” என்று கேட்டபோது அம்மூதாட்டியார் முறுவலித்தார்.

“நல்லாச் சொன்னீங்கய்யா… அவன் மந்திரியாகி ஏழெட்டு வருசம் ஆகுது. இதுவரைக்கும் நான் அங்கே அஞ்சு தடவைதான் போயிருப்பேன்.”

“போனால் ஒரு மாதம் இரண்டு மாதம் தங்கிவிட்டு வருவீர்களா?”

“நல்லாச் சொன்னீங்கய்யா… தங்கறதாவது, போன உடனே என்னை ஊருக்குத் திருப்பி பயணம் பண்ணி அனுப்புவதிலேயே குறியாயிருப்பானே! ‘பட்டணம் பார்க்கணும்னா சுத்திப்பாரு, திருப்பதிக்குப் போகணும்னா போயிட்டு வா… எல்லாத்தையும் பார்த்துவிட்டு உடனே விருதுநகருக்கு போய்ச்சேரு’ம்பானே…”

“இந்த வீட்டுக்கு வந்து உங்களைப் பார்ப்பாரா?”

“உம், ஆறு மாசத்துக்கு ஒருக்கா வருவான். இப்படி வாசப்படி ஏறி உள்ளே வருவான். ‘சௌக்கியமாம்மா?’ என்று கேட்பான். இப்படியே திரும்பி, அப்படியே போய்விடுவான். அவனுக்கு ஏது நேரம்?”

“மாச செலவுக்கு உங்களுக்குப் பணம் அனுப்புகிறாரா?”

“அனுப்பறான். பொடிக்கடை தனக்கோடி நாடார் மூலமாத்தான் பணம் வரும்.”

“எவ்வளவு பணம் அனுப்பறாரு?”

“120 ரூபாய்… பத்துமாய்யா? தண்ணி வரியே பதிமூணு ரூவா கட்டறேன். எனக்கு ஒரு மகள். அவளுக்குப் புருசன் இறந்து போயிட்டாரு. அவளுக்கு இரண்டு ஆம்பளைப் பிள்ளைங்க. ஒருத்தன் வேலை வெட்டி இல்லாமே இருக்கான். தங்கச்சி குடும்பம் குழந்தைங்கன்னு கவனிக்க மாட்டான். தங்கச்சி மவன்தானே; ஒரு வேலை செஞ்சு வைப்பானா? செய்ய மாட்டான்ய்யா. மாசம் அந்த 120 ரூபாய்தான் கொடுப்பான். அதுக்கு மேலே செலவு செய்யக் கூடாதும்பான். அவங்கவங்க உழைச்சுப் பிழைக்கணும்பான். நானும் பேசாமெ இருந்துடுவேன். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா? ரேசன் வந்தது பாருங்க. அப்ப இங்கே வந்திருந்தான். அவனைக் கேட்டேன். ‘என்னப்பா, இருந்த வீட்டிலேயும் கேப்பை சாப்பிடல்லே, வந்த வீட்டிலேயும் சாப்பிடல்லே. இப்படிக் கேப்பையும் கம்பும் போடறாங்களே, இதை எப்படிச் சாப்பிடறது? நெல்லு வாங்கித் தரப்படாதா?ன்னு கேட்டேன். ‘நெல்லுப் பேச்சு பேசாதே, ஊருக்கெல்லாம் ஒண்ணு. நமக்கு ஒண்ணா?ன்னு கேட்டான். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா?”

“இந்த வீடு எப்போ கட்டினது?”

“என் மகன் பிறக்கறதுக்கு முந்தியே கட்டினது இது. எனக்குப் பதினேழு வயசிலே அவன் பிறந்தான். எனக்கு இருபத்தஞ்சுலே அவன் தகப்பனாரு இறந்து போனாரு. நிலம் நீச்செல்லாம் இருந்தது. இவன் செயில்லே இருக்கறப்போ அதையெல்லாம் வித்து வித்துச் செலவழிச்சுட்டேன். இந்த வீடு ஒண்ணுதான் மிச்சம். சின்ன வயசிலே, இவனைப் படிக்க வைக்கணும்னு நான் கொஞ்சமான பாடாபட்டேன். ஒரு வாத்தியாரை இட்டு வந்து படிக்கச் சொன்னேன்.”

“ஏன் படிப்பை விட்டுட்டாரு…”

“எட்டு வரைக்கும் படிச்சான். அப்புறம் மூளைக்கு எட்டலேன்னு விட்டுட்டான். வீட்டிலே தங்கமாட்டான். தலை முழுக வரமாட்டான். பாடாப்படுத்துவான். கொட்டற மழையிலே எங்க போவானோ, எங்க திரிவானோ? வலை போட்டுத் தேடினாலும் அம்படமாட்டான். சரி, வெய்யில் அடிச்சா வருவானா? அப்பவும் வரமாட்டான். ஆனா ஒண்ணு, அப்பவும் தலைவலின்னு படுத்ததில்லை. இப்பவும் படுத்ததில்லை. சின்னப் பிள்ளையிலே ரொம்ப அடம்பிடிப்பான். இப்ப எங்கே போச்சோ தெரியல்லே, அந்தக் கோவமெல்லாம்? ‘அப்படி இருந்தவனா, இவ்வளவு அறிவாளியாயிட்டான்’னு எனக்கே அதிசயமாயிருக்கய்யா. அதோ இருக்காரே முருகன், அவர்தான் அவனுக்கு இவ்வளவு அறிவைக் கொடுத்திருக்கணும்.”

இதைக் கூறும்போது அந்த அன்னையின் முகத்தில் பெருமையும் மகிழ்ச்சியும் தாண்டவமாடின. ‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்’ என்ற வள்ளுவரின் வாக்கு எவ்வளவு மெய்யான வாக்கு.

“உங்கள் மகன் படிக்கவில்லைதான். ஆனாலும் அவர் அறிவாளிகளுக்கிடையே ஒரு சிறந்த அறிவாளியாக விளங்குகிறார். இந்த நாட்டில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கிறார்.”

“ஆமாம் ஐயா, அவன் என் வயிற்றில் பிறந்த மாணிக்கம். இந்தக் கைகளால் அவனைத் தாலாட்டினேன்; சீராட்டினேன்.” தன் மணிக்கரங்களைப் பெருமையுடன் பார்த்து மகிழ்ந்தவண்ணம் கூறினார் அந்த அன்னை.

“நீங்கள் உங்கள் கைகளால் அவரைத் தாலாட்டினீர்கள், இன்று அவருடைய கைகள் இந்த நாட்டு மக்களையே தாலாட்டுகின்றன.”

“உண்மைதானய்யா...”

“நேரு இங்கே வந்திருந்தபோது தங்களைப் பார்த்துவிட்டுப் போனாராமே, அவர் என்ன சொன்னார்?”

“சிரித்தபடியே மகிழ்ச்சியோடு என் கையைப் பிடித்துக் குலுக்கிட்டு ஏதோ சொன்னார். என் மகனும் அப்போது பக்கத்திலேதான் இருந்தான்.”

“நேருஜி என்ன சொன்னார்?”

“அவங்க பாஷை எனக்கு என்ன புரியதாய்யா..? என்னவோ சொன்னாரு! வேறென்ன சொல்லியிருப்பாரு? எல்லாரையும் போல் ‘இந்த மகனைப் பெற்றெடுத்த நீங்கள் பாக்கியசாலி’ன்னு சொல்லியிருப்பாரு.”

“இத்தகைய மகனைப் பெற்றெடுத்த தாங்கள் நிஜமாகவே பாக்கியசாலிதான்….! தமிழ்நாட்டுக்கு இப்படி ஓர் உத்தமனைப் பெற்றுக் கொடுத்த தங்களை வணங்குகிறோம் அம்மா…! நாங்கள் விடைபெற்றுக் கொள்ளலாமா?”

“மகனைப் பெற்று வளர்த்து, இந்த நாட்டுக்குக் கொடுத்துவிட்டேன். அவன் நீண்ட காலம் இருந்து இந்த நாட்டுக்கு மேலும் மேலும் சேவை செய்துகிட்டிருக்கணும் என்பதுதான் என் ஆசை.”

அந்த அன்னையின் கண்கள் கலங்கிவிட்டன.

“ஏன் கண் கலங்குகிறீர்கள்? இந்த மகனைப் பெற்றதற்கு மகிழ்ச்சி அடையுங்கள்.”

“துறவியாகிவிட்ட பட்டினத்தடிகளை, அவர் தாய் துறந்து விட்டதைப்போல், நானும் என் மகனை இந்த நாட்டுக்காகத் துறந்துவிட்டு நிற்கிறேன்” என்று கூறினார்.

தம்முடைய ஒரே தவப்புதல்வனை நாட்டுக்காகத் தியாகம் செய்துவிட்டுத் தனிமையில் வாழ்வதைக் காட்டிலும் பெரிய சோகம் ஒரு தாய்க்கு வேறென்ன இருக்க முடியும்?


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES