மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் மும்பையில் தங்க உள்ள அபார்ட்மென்ட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 11ம் தேதி இத்தாலியில் பஞ்சாபி முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு அவர்கள் மும்பையில் வசிக்க உள்ளனர்.
மும்பை வோர்லி பகுதியில் உள்ள ஓம்கார் 1973 என்கிற சொகுசு அபார்ட்மென்ட்டில் கோஹ்லியும், அனுஷ்காவும் குடியேறுகிறார்கள். 70 மாடிகளை கொண்ட அந்த குடியிருப்பில் கடந்த ஆண்டு ஒரு அபார்ட்மென்ட்டை வாங்கினார் கோஹ்லி. கோஹ்லி, அனுஷ்கா வசிக்கவிருக்கும் அபார்ட்மென்ட் ரூ. 34 கோடிக்கு வாங்கப்பட்டது. மூன்று டவர்கள் உள்ள ஓம்கார் குடியிருப்பில் சி டவரில் 7 ஆயிரத்து 171 சதுர அடி அபார்ட்மென்ட்டில் அவர்கள் வசிக்க உள்ளனர்.
குடியிருப்பு வளாகத்தில் டென்னிஸ் கோர்ட், ஜிம், கிரிக்கெட் விளையாடும் வசதி, நீச்சல் குளம், செல்லப் பிராணிகளுக்கான கிளினிக், குழந்தைகளுக்கான டே கேர் என்று ஏராளமான வசதிகள் உள்ளன. ஓம்கார் 1973 அடுக்குமாடி குடியிருப்பில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது மனைவி ஹேசல் கீச்சுடன் வசித்து வருகிறார். 2013ம் ஆண்டு இந்த அபார்ட்மென்ட்டை வாங்கினார் யுவராஜ் சிங்.
இத்தனை ஆண்டுகளாக கோஹ்லி டெல்லியில் வசித்து வந்தார். அனுஷ்காவுக்காக மும்பைக்கு ஜாகையை மாற்றுகிறார். அனுஷ்கா மும்பை வெர்சோவாவில் உள்ள பத்ரிநாத் டவர்ஸில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.